Tuesday 1 June 2021

அந்திக்குப் பின்னும் நீளும் பாடவேளைகள்




சில நேரங்களில் கவிதைகளை கடைசி பக்கத்திலிருந்து வாசிப்பதுண்டு.அப்படிதான் கே.ஸ்டாலின் எழுதிய “அப்பாவின் நண்பர்” கவிதை நூலை வாசித்தேன்.

அந்த வரிசையில் மூன்றாவது கவிதையில் , தாமதமாய்ப் பள்ளிக்கு வரும் மாணவன் வகுப்பறைக்கு வெளியே தயங்கி நிற்பதைப் போல மழை விட்ட மரத்தின்  இலை நுனியில் நிற்கும் துளியை தரைப் பார்க்க வைத்து இருப்பார்.வாசிப்பு முடியும் வரை அந்த துளியை நான் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

கவிதைகள் சொல்லப்படும் தொனி, ஒரே சீரான லயத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறது.வழிப்போக்கர்கள்,வீடற்றவர்கள்,சித்தாள்கள்,மதுக் கடையில் பணிபுரிபவர்கள் என பலரும் வந்து போகும் தொகுப்பில் பள்ளியிலிருந்து  சிறப்பு வகுப்பு  முடிந்தவுடன் தங்கைக்காக கால்சட்டையில்  முட்டையை பாதுகாத்துக்கொண்டு ஒடும் சிறுவன் மீதுதான் என் கவனம்.அவன் முட்டை கீழே விழுந்து விடாமல் வீடு சேர வேண்டும் என்றே மனம் பதைபதைக்கிறது.எளிய மனிதர்கள் மீது நம் கவனத்தை மேலும் குவிக்க்க் கோருகிறது இத்தொகுப்பு..குறிப்பாக சிறுவர் ,சிறுமியர்களின் வாழ்வியலில் நுழைந்து திரும்பச் செய்யும் இக்கவிதைகள் நம் பாதங்களில் புழுதி வாசத்தைக் கிளர்த்துகின்றன.

சிறு நகரையும் கிராமத்தையும் தன் கவிதை கோட்டுச் சித்திரங்களில் இணைக்க முயற்சிக்கிறார் கே.ஸ்டாலின்.

உறவுகளை நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் கவிதைகள் உறவுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன.

குழந்தைகளுக்கு நேரும் துயரங்களை காண்கையில் கவிதைகள் உணர்ச்சி மீறுகின்றன.கடவுளின் கண்களையும்,காதுகளையும் ஊனப்படுத்தும் வகையில்  வார்த்தைகளில் வலு சேர்க்கிறார்.


வாழ்க்கைக்குள் நீடித்து நிலைத்திருக்கும் மரணத்தை பேசும் கவிதைகள் வாசிப்பவனின் அகத்தை சலனமுறச் செய்கின்றன.வாழ்வின் இரு பக்கங்களிலும் மாறி மாறி செல்லும் பயணம் வாசிப்பாளனுக்கு தனி அனுபவத்தை தருகிறது.

இந்த அறமும் அன்பும் நீடிக்கும் கவிதைகளை தொடர்ந்து கே.ஸ்டாலின் தர வேண்டும். 

தொகுப்பை வாசித்து முடித்த பிறகும் நகரப் பேருந்தில் இருந்து மெல்லக் குனிந்து கைஅசைப்பவளின் பூரித்த முகம் இன்னும் நிழாலடுகிறது.

No comments:

Post a Comment