Tuesday 1 June 2021

அந்திக்குப் பின்னும் நீளும் பாடவேளைகள்




சில நேரங்களில் கவிதைகளை கடைசி பக்கத்திலிருந்து வாசிப்பதுண்டு.அப்படிதான் கே.ஸ்டாலின் எழுதிய “அப்பாவின் நண்பர்” கவிதை நூலை வாசித்தேன்.

அந்த வரிசையில் மூன்றாவது கவிதையில் , தாமதமாய்ப் பள்ளிக்கு வரும் மாணவன் வகுப்பறைக்கு வெளியே தயங்கி நிற்பதைப் போல மழை விட்ட மரத்தின்  இலை நுனியில் நிற்கும் துளியை தரைப் பார்க்க வைத்து இருப்பார்.வாசிப்பு முடியும் வரை அந்த துளியை நான் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

கவிதைகள் சொல்லப்படும் தொனி, ஒரே சீரான லயத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறது.வழிப்போக்கர்கள்,வீடற்றவர்கள்,சித்தாள்கள்,மதுக் கடையில் பணிபுரிபவர்கள் என பலரும் வந்து போகும் தொகுப்பில் பள்ளியிலிருந்து  சிறப்பு வகுப்பு  முடிந்தவுடன் தங்கைக்காக கால்சட்டையில்  முட்டையை பாதுகாத்துக்கொண்டு ஒடும் சிறுவன் மீதுதான் என் கவனம்.அவன் முட்டை கீழே விழுந்து விடாமல் வீடு சேர வேண்டும் என்றே மனம் பதைபதைக்கிறது.எளிய மனிதர்கள் மீது நம் கவனத்தை மேலும் குவிக்க்க் கோருகிறது இத்தொகுப்பு..குறிப்பாக சிறுவர் ,சிறுமியர்களின் வாழ்வியலில் நுழைந்து திரும்பச் செய்யும் இக்கவிதைகள் நம் பாதங்களில் புழுதி வாசத்தைக் கிளர்த்துகின்றன.

சிறு நகரையும் கிராமத்தையும் தன் கவிதை கோட்டுச் சித்திரங்களில் இணைக்க முயற்சிக்கிறார் கே.ஸ்டாலின்.

உறவுகளை நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் கவிதைகள் உறவுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன.

குழந்தைகளுக்கு நேரும் துயரங்களை காண்கையில் கவிதைகள் உணர்ச்சி மீறுகின்றன.கடவுளின் கண்களையும்,காதுகளையும் ஊனப்படுத்தும் வகையில்  வார்த்தைகளில் வலு சேர்க்கிறார்.


வாழ்க்கைக்குள் நீடித்து நிலைத்திருக்கும் மரணத்தை பேசும் கவிதைகள் வாசிப்பவனின் அகத்தை சலனமுறச் செய்கின்றன.வாழ்வின் இரு பக்கங்களிலும் மாறி மாறி செல்லும் பயணம் வாசிப்பாளனுக்கு தனி அனுபவத்தை தருகிறது.

இந்த அறமும் அன்பும் நீடிக்கும் கவிதைகளை தொடர்ந்து கே.ஸ்டாலின் தர வேண்டும். 

தொகுப்பை வாசித்து முடித்த பிறகும் நகரப் பேருந்தில் இருந்து மெல்லக் குனிந்து கைஅசைப்பவளின் பூரித்த முகம் இன்னும் நிழாலடுகிறது.

Monday 31 May 2021

யா - ஒ



நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.காலம்காலமாக அதற்கான விடை தேடலைத்தான் வாழ்க்கை பயணம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.பல விடைகள் நமக்குள்ளே இருக்கும்.நாம் கண்டடைவதில்தான் சிக்கல்.தலையில் வைத்துக் கொண்டே சீப்பைத் தேடுவது போல் ஆகிவிடும்.சில நேரங்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத ஆழத்தில் பதில்கள் ஒளிந்து கொள்ளும்.

இரண்டு பாத்திரங்களையும் நாமே வகிப்பதை விட நமக்கு வெளியே நிகழ்த்தி அதனைக் கவனிப்பது மட்டுமே நமது வேலையாக்குகிறார்கள் ஆசானும் சீடனும்.
யாவோவும் யாவாவும் உரையாடுகிறார்கள்.நாம்தான் பார்வையாளர்கள்.வாழ்க்கையெனும் நாடகத்தின் பல காட்சிகள் கண்முன் விரிகின்றன.யாவாவின் பல பந்துகளை வாழ்க்கைக்கு வெளியே விளாசிவிட்டு தனது அடுத்த பந்துக்காக காத்திருக்கிறார் யாவோ.
வாழ்வின் நுட்பமான இடங்களை தொடும் கேள்விகளும் பதில்களும் நம்மை  தெளியச் செய்கின்றன.

இளங்குடியை முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கையில் யாவா, தேடல் குறித்து ஒரு கேள்வி கேட்க யாவோ சொல்வார் ,
//எளிமையானது யாவா எளிமையானது
தாகம் நீரைத் தேடும்
கிணறு தாகத்தைத் தேடும்//

அந்த கடைசி வரிதான் எத்தனை ஆழமானதாக இருக்கிறது!? தாகம் என்பதை மட்டும் அது குறிப்பதில்லை.அதில் எதையும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.

கால இட பேதங்களுக்குள் விழுந்து கிடக்கும் மனித வாழ்விற்கு ஒரு கை நீட்டுகிறார் யாவோ.
அது மீட்கலாம், மீண்டும் அதற்குள் தள்ளலாம்.
ஏனெனில் கொல்வதற்கு கொடுக்கப்பட்ட விஷம் ஒருவரைக் குணப்படுத்தி விடலாம்.குணப்படுத்தக் கொடுத்த மருந்து ஒருவரைக் கொல்லலாம்.இதையும் யாவோதான் சொல்கிறார்.

ஆழமாக சிந்திக்கையில் வார்த்தைகள் அசுர பலமடைகின்றன.
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுக்கு ஒரு பதமாக யாவோவின் ஒரு அறை இப்போது உங்கள் கன்னத்தில் விழட்டும்.
"நிசப்தம் என்பது சப்தத்தின் கள்ளக் குழந்தை"



இந்த வார்த்தைகளை நம்மிடம் சேர்த்த தோழர் சிவசங்கர் , அற்புதமான ஓவியங்களால் அதனை ஈடு செய்துள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.