Tuesday 8 June 2021

இதுதான் வைரல்



பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "இதுதான் வைரல்" நூலை வாசிப்பது, பெருந்தொற்றுக் காலத்தின் பெரும் தேவைகளில் ஒன்று. நூலாசிரியர் முனைவர் ஹேமபிரபா பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும்போது எனது கவிதைகளின் வழியாக அறிமுகமானவர். கலை, இலக்கியங்கள் மீதான உரையாடல் தளத்தை அறிவியல் கழகத்தில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கியவர். எனது ஆரஞ்சு மணக்கும் பசி தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கான விவாதக் களத்தை அறிவியல் கழகத்தில் உருவாக்கிய வகையில் நெருக்கமான நட்பு வட்டத்தில் வந்தவர். 

தமிழ் இந்துவில் தொடர்ந்து அவர் எழுதிவரும் சமீபத்திய கட்டுரைகள் மிகுந்த ஆர்வத்தை அறிவியல் துறையில் ஏற்படுத்தி வருகின்றன. இவரின் முதல் கட்டுரைத் தொகுப்பு "இதுதான் வைரல்".
 
ஹேமபிரபாவின் அறிவியல் கட்டுரைகளின் பலமாக இருப்பது, அவரின் எழுத்து வாசிப்பவர்களுக்கு அணுக்கமாக இருப்பதுதான். சிக்கலான் குறியீடுகள் நிறைந்த அறிவியல் கட்டுரைகளை எளிதாகத் தருவது மிகுந்த சவாலான ஒன்று. அதை சாத்தியப்படுத்தி இருக்கும் எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார். 

பெருந்தொற்று முதல் அலையில் இடைப்பட்ட காலத்தில் மூத்த வயது உறவினர் இறந்துபோனார். கோவிட்-19 தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து குணமான பின்னரும் அதன் தாக்கத்திலிருந்து மீள இயலாமல் அவர் காலத்தில் மறைந்தார். அவரது நெருக்கமான உறவினரான, மென்பொறியாளராக இருக்கும் இளம்பெண் ஒருவர், அங்கு இருந்தவர்களிடம் உரத்த குரலில் சண்டையிட்டார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சையின் பொருட்டு அழைத்து வந்தவர்களைக் குற்றம் சாட்டினார். கரோனா தாக்குதல் என்பது கட்டுக்கதை என்றெல்லாம் அவர் பேசிக்கொண்டே போனது அபத்தத்தின் உச்சம். அதே இளம்பெண் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். "கரோனா என்பது நோயே அல்ல என்றால் எதற்குத் தடுப்பூசி? என்று நான் அவரிடம் கேட்டபோது இப்போதும் தனக்கு அந்தக் கருத்தில் மாற்றமில்லை என்றும், வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் சாமி படத்திற்கு முன்பு சீட்டு எழுதிப்போட்டு தேர்வு செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் இருக்கும் பாரதூரமிகு சமூகத்தின் சாட்சியாக அந்த இளம்பெண் காட்சியளிக்கிறார். 

கருதுகோள்களின் மீது உள்ள சந்தேகங்களை சாதகமாக்கிக்கொண்டு பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு அவதூறுகளை சமூக ஊடகங்களில் பரப்பிவரும் நடமாடும் வெடிகுண்டுகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இத்தகு சூழலில் வைரஸ் குறித்த புரிதல்களைப் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கிறார் ஹேமபிரபா. 

வைரஸை இனம் காணுவதில் இருந்து அதனை ஒட்டி உலகம் முழுக்க விரவிய வதந்திகள், தடுப்பு மருந்துகள், பரவும் முறைகள், வயதுவாரியாக நோய்த்தடுப்பு முறை செயல்படும் விதம், அவற்றை உருவாக்கும் முறைகள் எனப் பலவற்றையும் ஆராயும் கட்டுரைகள்.

அறிவியல் ஆராய்ச்சிப் பணியில் இருப்பவர் என்பதால் உலகம் முழுவதும் எழுதப்படும் கட்டுரைகளின் வாசிப்பறிவு பல்வேறு தரவுகளோடு அவரின் எழுத்தில் கூடுதல் தெளிவைத் தருகிறது. 

பெருந்தொற்றுக் காலத்தின் தொடக்கம் முதல் முதல் அலையின் முடிவுக்காலம் வரை படிப்படியாக அறிவியல் பார்வையோடு கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற இடர்மிகு காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் கொள்ளவேண்டிய கவனத்தின் விடுபடல்களையும் சுட்டிக் காட்டுகிறார். உலகம் முழுவதும் வைரஸ் குறித்த ஆய்வு நிலவரங்களை எடுத்துக் கூறுகிறார். 

தமிழ் இலக்கியத்தின்மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடு அறிவியல் கலைச் சொற்களைத் தமிழ்க் கட்டுரைகளில் பயன்படுத்த வைத்துள்ளது என்று எண்ணுகிறேன். மேலும் 

இதுபோன்ற பெருந்தொற்றுக் காலங்களை வரலாற்றில் அறிவியல் துணைகொண்டு கடந்து வந்ததைத் தன் கட்டுரைகளில் கூறி இருப்பது ஆறுதலைத் தருவதோடு பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. வாசிப்பவர்களுக்கு அறிவியல் மீது ஆழ்ந்த பிடிப்பை இவரது எழுத்து உருவாக்குகிறது. மக்களுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் பிணைப்பை மேலும் வலுவாக்கும் இவரது எழுத்து அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துக்குத் துணை செய்யும் குரல்களில் ஒன்றாக அமைந்து, தன் முதல் தொகுப்பின் மூலமாக ஒரு இடத்தைக் கோருகிறது.

No comments:

Post a Comment