Monday 17 May 2021

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி

தேர்தல் ஜனநாயகம் என்றொரு வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப் படுத்துகிறோம். உண்மையில் அது உயிர்ப்போடுதான் இருக்கிறதா?பணம்,மதம்,சாதி எல்லாம் சேர்ந்து தாக்குதல் நிகழ்த்திய பிறகும் தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் ரத்தம் வழிய எழுந்து நிற்கும் கதாநாயகன் போல எப்படி அது  பிழைத்துக்கொள்கிறது?

நம் ஒவ்வொருவர் கைகளில் இருக்கும் அந்த ஒரு வாக்குதான் உதவி செய்கிறது. உண்மையில் அது நிற்க உதவுகிறதா? இல்லை அது ஒரு பாவனையா? இறந்து போன சடலத்தை நாம் அலங்கரித்து வைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்துக் கொள்கிறோமா?


ஒவ்வொரு தேர்தலிலும் அதன் போக்குகளைப் பார்த்து நாம் விரக்தியடைகிறோம். வாக்கு அளிக்கும் இயந்திரம் நாம் அளித்த வாக்கை சரியாக பதிவு செய்துக் கொண்டதா என்று அதை திரும்பி பார்த்துக் கொண்டேதான் வாக்குசாவடியை விட்டு வெளியேறுகிறோம்.ஆனாலும் நம் கடைசி நம்பிக்கையாக அதுவே எஞ்சுகிறது.


இந்திய மாநில தேர்தல்களின் வரலாறுகள் கூட அந்த நம்பிக்கையைத்தான்  உறுதி செய்கின்றன.1975 இல் அப்போதைய இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர காலத்தில் இருந்து கூட இந்திய ஜனநாயகம் மீண்டிருக்கிறது.

தமிழகத்திலும் கூட 356-ன்படி ஆட்சிகள் கலைக்கப்பட்டு ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் தேர்தல் ஜனநாயகத்தின் சாட்சிகள்.

தேர்தல் ஜனநாயகத்தை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளில் இந்திய தேர்தல்களின் பின்னணியை சமூக ஆய்வு நோக்கில்  விரிவாகப் பேசுகிறது "இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?'' நூல்.


இந்தியா முழுக்க பல தேர்தல் பிராச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் எழுதிய இந்த நூலை தமிழில் இ.பா.சிந்தன் மொழிப்பெயர்த்துள்ளார்.


அவர் இந்த நூலை எவ்வாறு எழுத தொடங்கினார் என்ற அத்தியாயமே இந்திய அரசியல். தேர்தல் சூழலுக்கு கட்டியம் கூறிவிடுகிறது. பா.ஜ.க தலைவர்கள் பலருடனும் இணைந்து  தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம், அந்த கட்சியின் வளர்ச்சியின் பின்ணணியை படிப் படியாக அலசி ஆராய செய்கிறது.

மோடி என்ற பிம்பம் எவ்வாறு குஜராத்தில் இருந்து பெரிதாக்கப்பட்டது என்பதற்கு விடை தருகிறார். பஞ்சாப்,மணிப்பூர்,திரிபுரா மாநிலங்களில் தேர்தல் அனுபவங்களிலிருந்து இந்தியா முழுக்க தேர்தல் நடைபெறும் ஒரு வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பிரச்சார யுக்திகள் தொழில் நுட்பத்தால் மாற்றமடைந்துள்ள நிலையை, அதன் பின்ணணிகளை அலசுகிறது.ஃபேக் செய்திகளை உருவாக்குதல், அதனை பரப்ப திட்டமிடுதல், அதில் கட்சித் தலைவர்களின் பாத்திரப் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.


இந்திய சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற தேர்தல்களைப் பின்னோக்கி பார்க்க முடிகிறது.தேர்தல்,ஆட்சி அதிகாரத்தின் பின் இருக்கும் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் ,குறிப்பாக பிஜேபி அரசு எவ்வாறு சலுகை சார் முதலாளி அரசாக இருக்கிறது என்பதைத் தரவுகளோடு இந்நூல் முன்வைக்கிறது.


கட்சி அரசியல் தாண்டி தனி நபர்களாக மக்களுக்கு அரசியல் பணி செய்ய முன் வந்தவர்களின் முடிவை அரவிந்த் கெஜ்ரிவால், இரோம் சர்மிளா ஆகியோர் உள்ளிட்ட சிலரை முன்வைத்து பேசும் பக்கங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பரிவோடு ஆய்வு செய்கின்றன.


இந்திய அரசியல் தேர்தலை மையமாக கொண்டே சுழல்வது.அதன் நிழல் உலகப் பின்னணியை முழுமுதலாக நாம் அறிந்து கொள்ள நூல் வழி செய்கிறது.


தனி நபரின் கடமை வாக்கு அளிப்பதோடு நிறைவுறுவதில்லை.தேசபக்தியின் உணர்ச்சியில் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிட்டு மேயும் கறுப்பு ஆடுகளை இது போன்ற வாசிப்புகள்தான் அடையாளம் காட்டுகின்றன. அவர்களின் திட்டங்களை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

தேசபக்தி எல்லை மீறுகிறது

 


கபசுரக்குடிநீர் பாட்டிலில் கோமியத்தை நிரப்புகிறீர்கள்

மயானக் கரையில் அமர்ந்து பஜனை பாடுகிறீர்கள்

இறந்தவர்கள் எழுந்து ஒரு வரிக்கு தாளமிட்டு மீண்டும் கண்மூடிக்கொண்டதாக சிலாகிப்பு வேறு!


மரங்களில் மூக்குரசி ஆக்சிஜனைப் பெற முயற்சித்ததில்

ஏற்கனவே மாண்புமிகு  வைரஸ் குடித்ததுப் போக

மிச்ச சொட்டு ரத்தமும் போகிறது

"போனால் போகட்டும்

ரத்தம் மண்ணுக்கு உயிர் கொரோனாவுக்கு!"

என்று ஆவேசமடைகிறீர்கள்

அமைதி அமைதி

நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்

ஆய்வகங்களில் கமகமக்கிறது சாணத்தின் வாசம்!


அதோ அங்கே

நாசா விஞ்ஞானிகள் 

தெறித்து ஓடுகிறார்கள்

விரட்டிப் பிடித்து பாரத் மாதாவை வாழ்த்தச் சொல்கிறீர்கள்

தேசபக்தியில் கோமாதாவுக்கே புல்லரிக்கிறது!


ஒரு புள்ளிவிவரம் 'மா' என்கிறது

மாட்டுச்சாணி சோப்புக்கும் கோமியச் சானிட்டைசருக்கும்

சந்தையில் தட்டுப்பாடு.

கெளபதியார் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு

கொரோனாவைத் தடுக்க வைக்கோல் மெத்தைகள்!


அதனாலென்ன

தேச பக்தர்களின் விரல்கள் வலுமிக்கவை

கூர் தீட்டினால் போதும்

ராகம் மாறாமல் சொறியத்தக்கவை!

Art : GraphicNerd