Monday 31 May 2021

யா - ஒ



நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.காலம்காலமாக அதற்கான விடை தேடலைத்தான் வாழ்க்கை பயணம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.பல விடைகள் நமக்குள்ளே இருக்கும்.நாம் கண்டடைவதில்தான் சிக்கல்.தலையில் வைத்துக் கொண்டே சீப்பைத் தேடுவது போல் ஆகிவிடும்.சில நேரங்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத ஆழத்தில் பதில்கள் ஒளிந்து கொள்ளும்.

இரண்டு பாத்திரங்களையும் நாமே வகிப்பதை விட நமக்கு வெளியே நிகழ்த்தி அதனைக் கவனிப்பது மட்டுமே நமது வேலையாக்குகிறார்கள் ஆசானும் சீடனும்.
யாவோவும் யாவாவும் உரையாடுகிறார்கள்.நாம்தான் பார்வையாளர்கள்.வாழ்க்கையெனும் நாடகத்தின் பல காட்சிகள் கண்முன் விரிகின்றன.யாவாவின் பல பந்துகளை வாழ்க்கைக்கு வெளியே விளாசிவிட்டு தனது அடுத்த பந்துக்காக காத்திருக்கிறார் யாவோ.
வாழ்வின் நுட்பமான இடங்களை தொடும் கேள்விகளும் பதில்களும் நம்மை  தெளியச் செய்கின்றன.

இளங்குடியை முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கையில் யாவா, தேடல் குறித்து ஒரு கேள்வி கேட்க யாவோ சொல்வார் ,
//எளிமையானது யாவா எளிமையானது
தாகம் நீரைத் தேடும்
கிணறு தாகத்தைத் தேடும்//

அந்த கடைசி வரிதான் எத்தனை ஆழமானதாக இருக்கிறது!? தாகம் என்பதை மட்டும் அது குறிப்பதில்லை.அதில் எதையும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.

கால இட பேதங்களுக்குள் விழுந்து கிடக்கும் மனித வாழ்விற்கு ஒரு கை நீட்டுகிறார் யாவோ.
அது மீட்கலாம், மீண்டும் அதற்குள் தள்ளலாம்.
ஏனெனில் கொல்வதற்கு கொடுக்கப்பட்ட விஷம் ஒருவரைக் குணப்படுத்தி விடலாம்.குணப்படுத்தக் கொடுத்த மருந்து ஒருவரைக் கொல்லலாம்.இதையும் யாவோதான் சொல்கிறார்.

ஆழமாக சிந்திக்கையில் வார்த்தைகள் அசுர பலமடைகின்றன.
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுக்கு ஒரு பதமாக யாவோவின் ஒரு அறை இப்போது உங்கள் கன்னத்தில் விழட்டும்.
"நிசப்தம் என்பது சப்தத்தின் கள்ளக் குழந்தை"



இந்த வார்த்தைகளை நம்மிடம் சேர்த்த தோழர் சிவசங்கர் , அற்புதமான ஓவியங்களால் அதனை ஈடு செய்துள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment