Wednesday 2 December 2020

இரவின் பாடல் ததும்பும் காமத்தின் ஒளி

(ரொட்டிகளை விளைவிப்பவன் நூலை முன்வைத்து ந.பெரியசாமி எழுதிய விமர்சனம் 2020 செப்டம்பர் நிலவெளி இதழில் வெளியானது) 

லோலாக்கு அணிந்த காதுகள் அரிதாகின. நினைவில் அரிதானவைகள் தோன்ற அது நிரம்பிக் கிடந்த நாட்களில் பயணிக்கத் துவங்கிடுகிறோம். எதுவும் நிலைத்திருப்பதில்லை. நிலைத்திருக்க விடுவதுமில்லை. பயன்படுத்துபவர்கள் நாமாக இருந்தபோதும். நம் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன்களே. அதிகாரத்திலிருக்கும் அவன்களால் ஏற்படும் இழப்பு நட்சத்திரங்களின் எண்ணிக்கையாகிறது. காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி எனும் பாடல் வரிகள் லோலாக்குகளை ரசித்திருந்த நாட்களை மீட்டெடுப்பதுபோல் நம் இழந்த வாழ்வை மீட்டெடுக்கின்றன ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவிப்பவன் கவிதை தொகுப்பு. 

காற்று திறக்காத வரை 
தனக்குப் பின்னால்தான் 
பெருங்கடல் 
மறைந்து கொண்டிருப்பதாக 
எண்ணியிருக்கும் 
சிறு சன்னல். 
தொகுப்பின் துவக்கத்தில் இருக்கும் இக்கவிதையில் உள்ள சிறு சன்னலை நான் கண்களாக கொள்கிறேன். கண்களை மூடிக்கொள்ள எதுவும் சாத்தியமே. இச்சாத்தியத்தை நிகழ்வில் பொருத்துதல் எல்லோருக்கும் வாய்த்திடாது. பெரும்பாலானவர்களுக்கு ஆசைஇ கனவு என்ற நிலையிலேயே பதங்கமாகிவிடும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவனுக்கு சாத்தியமே. அவர்களின் கனவு ஆசை அனைத்தையும் சாத்தியமாகிக் கொண்டிருப்பதற்கு நாமே சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி' கவிதையில் எளியோனின் ஆசையும்இ அதிகாரத்தின் ஆசையும் என்னவாக செயல்படுகிறது என்பதன் காட்சியாக்கம் நிதர்சனம். வாழ்வின் ஈரம் காய்ந்த பெண்ணொருத்தியின் அழுகுரலில் நம்மையும்இ பொக்லைன் முகம் தவலும் அமைதியில் அதிகாரத்தையும் கண்டுகொள்ள முடியும். 'கண்ணாடிப் போத்தலில் தெறித்த மூடியென வாழ்வு' கவிதையில் எளியோன் மதுவில் கிடப்பதுஇ அதிகாரம் தனி வார்டு அமைத்து அவனது உடமைகளை பறிப்பதுஇ 'காரம் நிமித்த இரவுகள்' கவிதையில் அல்சர் நோயாளிகளை உருவாக்கும் அதிகாரம் அவனையே பகடியாக்கி பார்த்து ரசிப்பதும் நல்ல வெளிப்பாடு. 

'ஞாயிறு போற்றுதும்' கவிதையில் எலும்புத் துண்டிற்காக எச்சிலொழுக காத்திருக்கும் வறிய நாக்குடையோருக்கும், கொழுத்த வயிருடையோருக்குமான அரசியல், 'ஒரு மரியாதை நிமித்தச் சந்திப்பு' கவிதையில் கர்த்தரையும் அய்யனாரையும் சந்திக்கச் செய்து கேட்டும் தட்டியும் நின்றுகொன்டிருக்கும் காலம் இதுவல்ல. உடைப்பை ஏற்படுத்தவேண்டிய காலம் இதுவென நினைவூட்டுகிறார் ஸ்டாலின். 

'குருதி வழியும் சக்கரப் பற்கள் ' கவிதை நாவலுக்கானது. தஞ்சை போன்று நிலமும் விவசாயமும் நிறைந்த பகுதிகளில் முதன்முதலாக ட்ராக்டரை பார்த்தபோது மக்களிடையே உண்டான அச்சம் எத்தகையானதென்பதை நம்மால் அறிய முடியும். மனித சக்தியை நம்பிக் கிடந்த முதலாளிகளுக்கு இயந்திரம் செல்லப்பிள்ளைகளானது. அறிவியல் எளியோனை பசித்த வயிறோடு அலையச் செய்தது. அதன் வியப்பை கண்டு வியந்தவன் வாயில் மண்ணை தள்ளி மகிழ்தது. நிலம் கடந்து இப்போ கம்பெனிகளில் அதன் அமித்ஷாதனத்தை தினம் எதிர்கொண்டு வாழ்கிறோம். நீண்டகால அனுபவத்தின் அறிவு செல்லாத பணமாகியது. புறக்கணிப்பின் வலிநீக்கியாக கலை இருப்பதால் பித்தாகவேண்டியோரின் எண்ணிக்கையை மட்டுப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் இக்கவிதையை வெகு நேரத்தியோடு காட்சிபடுத்தியுள்ளார். நிலத்திற்கு ஒவ்வாத ஒன்று வருவதை ஏற்க மறுக்கும் அந்நிலம்வாழ் உயிரிகளின் நிலையை காட்சிபடுத்தி, பின் மக்களின் வியப்பை காட்டி, இயந்திரத்தின் பசியைக் காட்டிஇ முத்தமிடும் முதலாளியின் வக்கிரத்தை சொல்லி, 

திருகாணிகள் தொலையாத வண்ணம்
பாதுகாப்பதைத் தவிர
ஏதும் வழியற்றவன்
நெஞ்சிலறைந்து அழுகையில்
சுடச்சுட விழும் ஒரு துளி
நூற்றாண்டு மூத்த கிழவனது. எனும் கவிதையின் முடிப்பிலிருக்கும் துளி இன்றளவும் சொட்டிக்கொண்டே இருக்கும் மூதாதைகளின் கரிப்பை நம் உடலும் உணர செய்திடுகிறார். இக்கவிதையின் நீட்சியாக 'ரொட்டிகளை விளைவிப்பவன் ' கவிதையை வைத்திருப்பது முந்தைய கவிதையின் வாசிப்பு மனநிலையை அப்படியே வைத்திருக்கச் செய்திடுகிறது. முதலாளிகள் வித்தை அறிந்தவர்கள் எவனிடம் எப்படி வேலையை கரக்க முடியும் எனும் அரிச்சுவடி அவர்களின் கவசகுண்டலம். விவசாய வேலையின் அனுபவத்தை பரோட்டா மாஸ்டராக மாற்ற செய்திருக்கும் லாவகம் அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. பாலையாக்கப்பட்ட நிலத்திலிருக்கும் தலைவிக்கு அவன் வெற்றி நீர்வார்க்கும் செய்தியாக இருப்பது காலத்தின் அவலம். வெடித்துக் கிடக்கும் நிலத்தின் கதறல் நம்மின் கதறலாகவும் மாற்றம்கொள்ளச் செய்திடுகிறது கவிதை. நிலத்தினுள் மண்புழுவாக வாழ்பவனால்தான் இக்கவிதை சாத்தியம். ஸ்டாலின் மண்புழுவாக வாழ்ந்திருக்கிறார். 

சாத்தியப்படும் சூழலில் எல்லாத் தொடர்ந்து உலகமயமாக்கலினால் உண்டாகும் துயர்களை பாடிய பாணன் யவனிகாவிற்கு இக்கவிதைகளை சமர்ப்பித்திருப்பதில் ஸ்டாலினின் நுட்பத்தை உணரமுடிகிறது. துயரமும் வலியும் அடர்ந்து கிடக்கும் இப்பகுதியில் 

அவளைப் படுக்கையில் தள்ளுகையில்
காதில் விழும் குக்கர் சப்தம்
கலவிக்கான சங்கீதம். 

எனும் வரிகளில் ஸ்டாலின் மீட்பராகிடுகிறார். 

பெரிதினும் பெரிது கேள் நாம் உழன்று சிக்கிக்கொள்ளாமல், சிறிதினும் சிறிதாக ஆசைகொள்ள இடர் அகற்றி மகிழ்வை கண்டடைந்திடலாம். குளமாகி குளத்தின் படியாகி நனைய முடியாத வாழ்வை விட தினம் நனையும் சிட்டுக்குருவியாதல் அழகென காட்டும் இக்கவிதை வசீகரம் மிக்கதாக உள்ளது. 

குளக்கரையின் 
மேலிருந்து கீழிறங்கும் 
மூன்றாவது படிக்கட்டு 
நனைவதற்கு 
 நெடுங்காலம் ஆகிவிடுகிறது 
சிட்டுக் குருவியோ 
படிகளில் தாவித் தாவி 
தினம் நனைகிறது. 

கொடியது வாழ்வின் இழப்பை அறிந்துகொள்ளும் தருணம். ஸ்டாலின் சரவணன் நிறைய்ய வலிகளை நினைவு படுத்தியபடியே இருக்கிறார். மணலுக்கு மாற்றாக வந்திருக்கும் எம் சேண்ட்டை கைகளில் அள்ளிப் பார்க்க மலையின் கணத்தை உணருபவர்களால் இயல்பாக நகர்ந்திட முடியாதோ அவ்வாறாகத்தான் ' முன்பு மலையென்றிருந்தது' கவிதையை கடப்பதும். 

என்றைக்கும் எங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவன் வே.பாபு. அவனுக்காக எழுதப்பட்ட அஞ்சலி கவிதை மீண்டும் அவனுடனான நாட்களைத் தத்தது. அக்கவிதையில் வீழ்ந்த நீர்துளிகள் அவன் உருவைக்காட்டி மறைந்தன.
 தேவாலய மெழுகுவர்தியினின்று
 கைக்கொண்ட சிறு வெளிச்சத்தோடும்
 ஓடுகிறான் கவிஞன்.
 எனும் வரிகளில் பாபுவை கட்டிவைத்துள்ளார் ஸ்டாலின். இக்கவிதை இருக்கும் இப்பகுதி யூமா வாசுகிக்கானதாக இருப்பது அத்தனை பொருத்தப்பாடு. எப்பொழுது அவருடன் உரையாடினாலும் மூவருக்குமான தனித்த நாட்களை நினைவூட்டியபடியே இருப்பார்.

 சமூகத்தின் பொதுபுத்தியில் இருக்கும் ஒழுங்கை ஆகச் சிறந்ததென முடிவுசெய்து அதில் ஒரு மில்லிமீட்டர் மீறலை செய்திட்டாலும் மிகுந்த பயமுறுத்தலைச் சொல்லி பத்திரமா இரு, பத்திரமா இருவென கண்டிப்புகளோடு குழந்தைகளை குழந்தமை இல்லாது, தனித்துவங்களைக் கண்டடைந்து கொண்டாடத் தவறிட்ட தறுதலைச் சமூகத்தின் அவலத்தை காட்சிபடுத்துகிறது இக்கவிதை.

தாய்த் தவளை
 குட்டிகளுக்குச் சொல்லியது
  குதிக்கையில் கவனமாய் இருங்கள்
 அதோ!
 வானத்தில் தலையிடிபட்டு
 மாண்டுபோன
 மூத்தக் குடியின் கல்லறை'

 இக்கவிதையின் நீட்சியாக இப்படியாக வளர்க்கப்படும் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளை நிவர்த்திக்கும் வகையில் எப்படியான அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்இ வாழ்வார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது ' மிச்சசொச்ச வாழ்வின் சாம்பல்' கவிதை. காமம் மனவெளிப்பாடு. நினைவுகளின் தன்மைக்கேற்ப அதன் பிறப்பு இருக்கும். அவரவரின் வாழ்வியல் சூழலே இதற்கு ஆதாரம். அவ்வப்போது உண்டாகும் காமத்தின் புள்ளிகள் ததும்பும் கோலமாக பிரவகிக்கும் தருணம் மகத்தானது. இரவின் இக்கோலம் நமக்கானது. நம்மை கொண்டாட்டத்தில் வைத்திருப்பது. இது எல்லா இரவுகளுக்குமானதும் அல்ல. வகைமைகள் நிறைந்த காமத்தை இரவின் பாடலாக்கும் ஸ்டாலின் முதன்மையாக நிதானத்தில் இயங்கும் காமத்தைக் காட்டிஇ காய்ந்த சருகில் விழும் நெருப்பான காமத்தை பற்றவைத்து கூந்தலில் சொட்டும் வெள்ளத்தின் மீந்த துளிகளில் நமை சிலிர்க்கச்செய்து நமக்கான காமத்தை நினைவூட்டி வனப்பறவைகளாக நமை உருமாற்றம் கொள்ளச் செய்கிறார். இரவின் பாடல் ஒளி ததும்பும் ஆறு.

 சொற்கள் மகோன்னதமானவை. எதையும் சாத்தியமாக்கும். ஒரு கவிதைக்குள் இருக்கும் சொற்கள் நமை படுத்தும் பாடு அறிந்து அனுபவிப்பவர்கள்தானே. இயங்கியபடியே இருக்கும் காலத்தை கொண்டு எல்லா காலங்களிலும் போய்வரச் செய்யும் மாயங்களைச் செய்யக்கூடியது. 'அதனாலென்ன...' கவிதையில் அப்படியானதொரு மாயத்தை உணரலாம். நம்மை குழந்தையாக்குதல்இ நாமே குழந்தையாதல், குழந்தைமைக்கும் நமக்குமான ஊடாடலென பல தளங்களில் கவிதை நமை பயணிக்கச் செய்திடுகிறது. இக்கவிதையின் தொடர்ச்சியாக 'காலக் கம்பியிலாடும் சிறுபாதங்கள்' கவிதையைக் காணலாம். இக்கவிதை வெகு நேர்த்தியாக பின்னப்பட்டு நல்ல குறும்படம் ஒன்றை கண்ட மனநிலையைத் தருகிறது.

 அவளின் ஞானப்பல் தொட்டுத்
 திரும்பும் ஒவ்வொரு முறையிலும்
 தொலைந்து மீளுமவன்
 குழந்தையின் கையில்
 பனைவெல்லமாய் ஆகிறான்
 எனும் 'மெய்முழுக்கு' கவிதையில் வரும் வரிகள் நமை பனைவெல்லமாய் மாற்றுகின்றன. குழந்தைகள் வித்தைக்காரர்கள். அவர்கள் நாம் அவர்களை வளர்ப்பதாக நம்பி கெட்டித்துக்கிடக்கின்றோம். உண்மையில் அவர்கள்தான் நம்மை வளர்த்தெடுக்கிறார்கள். நம் மனத்தடைகளை விலக்கி குழந்தையாக தெரிந்துகொண்டால் போதும் வாழ்வில் பெரும் பொக்கிசங்களை கண்டடையலாம். யூமாவாசுகி போன்றோர் குழந்தையாக தெரிந்திருப்பதால்தான் அவர்களால் தொடர்ந்து சிறார் இலக்கியங்களை படைத்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்டாலினின் இக்கவிதை வாசிப்பவர்களை சில கணமாவது குழந்தையாக்கும்.

 மோசமான விபத்திலிருந்து மீண்டவனை சாவை பார்த்து வந்தவன்இ சாவை வென்று வந்தவன் என்றெல்லாம் சொல்வதுண்டு. மரணபயம் என்பதையே எதிர்கொள்ள தயங்கும் நமக்கு மரணம் குறித்த புரிதல்கள் வெவ்வேறானவை. புறத்தால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்துகொள்ளக் கூடியவை. அகத்தில் உண்டாகிட்ட பயம்தான் நம்மை ஆளத்தொடங்க எல்லாவற்றிலுமிருந்து விலகத் தொடங்கிடுகிறோம். 'விளரிப் பண்' கவிதையில் மரணத்திடம் மண்டியிட்டு கைவிரித்து ஒப்பளிக்க சொல்கிறார். எதுவொன்றிலும் நாம் நமை ஒப்பளிக்க அது குறித்த புரிதலை அடைய முடியும். இப்படியான மனப்போக்கு கைவரப்பெற்றவர்களால் வலியை நேசிக்க முடியும். வலியால் காதலை உணர்ந்து எத்தகைய வலியையும் தாங்க முடியும். சிறு முத்தம் வலியிலிருந்து விடுதலை அடையச் செய்யும் என்கிறார் ' சீழ் மணக்கும் காதலொன்று' கவிதையில்.

 ஆதார் எண்ணுக்கு தோட்டாக்களை ஊட்டுதல், குத்துக்காலிட்டு அமரும் மனப்போக்கு, சமூக விரோதமாக்கப்பட்ட உணவு பழக்கமென அதிகாரத்தின் கீழ்மையை எள்ளலோடு வெளிப்படுத்தல்இ அடிக்கடி திறந்து காட்டப்படும் உடல் சீக்கிரம் அலுப்பை ஏற்படுத்துமெனும் வாழ்தலின் மீதுள்ள நேசிப்புகள், கரிப்பு சுவையேறிய முலைகளோடு இருப்பவளுடனான அகத்தினைப் பாடல்கள் என தொகுப்பிலிருக்கும் சிறு குறிப்பு வரைதல் கவிதைகள் மூன்றும் முத்துக்கள்.

 புறத்தின் வலி, அகத்தின் அமைதி நிலை, அறியச்செய்யும் குழந்தமை, காதலின் உன்னதம், காமத்தின் மகோன்னதம், கீழ்மைமிகு அதிகாரத்தின் குரூரம்இ எளியோரின் மனப்போக்கு என பெரும் பயணிப்பை நமக்கானதாகவும் மாற்றியுள்ளார். கவிதைகளில் உரைநடை தன்மை மிகுந்து வாசிப்பில் சலிப்பை உருவாக்க இருக்கும் கணத்தில் கவித்துவமான சொற்கள் நமை நிமிர்வு கொள்ளச் செய்திடுகின்றன. தெளிந்த நீரோடையில் பளிங்காக மிளிர்ந்திடுகிறார் ஸ்டாலின் சரவணன்.

No comments:

Post a Comment