Friday 14 May 2021

ஜி.நாகராஜன் : எழுத்தும் வாழ்வும்

சி.மோகன் எழுதிய "ஜி.நாகராஜன்:எழுத்தும் வாழ்வும்" நூல் கிண்டில் வாசிப்பில் கிடைக்கிறது.சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் நூல். 

ஜி.நாகராஜன் என்ற ஆளுமையை அவரது எழுத்து, வாழ்வின் ஊடாக சித்திரமாக முன் வைக்கிறது. ஒரு ஆவணத் திரைப்படத்துக்கான தொடக்கத்தோடு காட்சிகள் கண் முன் விரிந்து மெல்ல ஜி.என் என்னும் ஆளுமை விஸ்வரூபம் எடுத்து நிற்கச் செய்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுங்கு இல்லை என்று எல்லோரும் கவலையுறும்போது வாழ்வை நெருக்கமாகப் பார்த்து அதனை அனுபவித்து சென்றுள்ளார் ஜி.என்.இது ஒரு வகையில் பிறரால் இப்படியான சுதந்திரமான வாழ்வை வாழ முடியாத ஏக்கத்தையும் சேர்த்தே உணர்த்துகிறது. அவருடைய எழுத்தில் அவர் கடைப்பிடித்த சுருக்கத்தை தன் வாழ்க்கையாகவும் கொண்டு உள்ளார். 

ஜி.நாகராஜன் பற்றிய அறியப்படாத பக்கங்களை செய்தியாக இல்லாமல் கலை நயத்தோடு சி.மோகன் முன் வைத்துள்ளதுதான் பெருங்கலைஞனுக்கு செய்திருக்கும் மரியாதை. ஜி.நாகராஜனுடைய கட்டுரைத்தன எழுத்துக்களிலும் கூட புனைவில் இருக்கும் அதே தெளிவு. ஒரு படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் இடையேயான உறவு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை தர்மு சிவராமின் 'சதுரச் சிறகு' என்ற சிறுகதைக்கான விமர்சனத்தில் ஜி.என் வெளிப்படுத்தியிருக்கிறார். ஞானரதம் அக்டோபர் இதழில் வெளியான அக்கதைக்கு ஜி.என். எழுதிய விமர்சனம் ஞானரதம் ஜனவரி 1974 இதழில் வெளியானது. 

 //ஆசிரியர் தான் படைத்த படைப்பைப் பிறர் பார்க்கவொண்ணாதவாறு அவரே அதை மறைத்துக்கொண்டு நிற்பது போன்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. படைப்பாளிக்குத் தன் படைப்பைத் தன்னிலின்றும் முற்றும் துண்டித்துத் தூர நிறுத்தும் தார்மீக தைரியம் வேண்டும். 'சதுரச் சிறகுக’ளின் ஆசிரியரோ, தானில்லாது தன் எழுத்து நிற்காது என்ற அவநம்பிக்கையில் தானே அதைச் சுற்றிச் சுற்றி வருகிறார். கதைக்கு ஆதாரமான ஆசிரியரின் அனுபவம், இன்னும் ஆசிரியரின் உள்மனதோடு கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவை அறுத்து விடுதலை பெறவில்லை போல் தோன்றுகிறது.//

ஜி.என்.னை முதன்மை பாத்திரமாகக் கொண்டு தமிழின் ஆகச் சிறந்த ஆளுமைகள் கதைகள் எழுதி இருப்பதையும் அவற்றைப் பற்றிய பத்திகளையும் சி.மோகன் அற்புதமாக எழுதி உள்ளார்.

ஜி.என் கதைகளில் பொன்மொழிகள் இல்லை என்று புகார் செய்பவர்களுக்காக சில பொன்மொழிகளையும் எழுதி இருக்கிறார்.அதிலொன்றுதான் புகழ்பெற்ற"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" அதிகம் அறியப்படாத ஒன்று இது, "மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ள ஜி.என் புற்றக்குடிப் புலவர் என்ற பெயரில் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.அதிலொன்று, 
 
சுய விருந்து

அவன் அல்லற் படுகின்றான்; 
இரங்காதே. 
அவள் தொல்லைப் படுகின்றாள்; 
கசியாதே. 
அவர் இம்சைப் படுகின்றார்; 
உருகாதே. கசிதலும், உனக்கு நீ ஊட்டும் விருந்தே! 
ஆவன இருப்பின் ஆவன செய்; செய்வன இல்லையேல் செல்லுக மேல்!

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சுடராகத் தன் எழுத்தில் வைத்து அது மேலும் காலத்தால் துலங்கி பிரகாசிப்பதை நூல் உறுதி செய்கிறது. ஜி.என் .னின் எழுத்து,கட்சி மற்றும் கல்விப்பணி, திருமண வாழ்க்கை,நண்பர்களுடனான நாட்கள் என்று அவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் பேசுகிறது, "ஜி.நாகராஜன்-எழுத்தும் வாழ்வும்".

கிண்டில் நூலுக்கான சுட்டி:

1 comment: