Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, 17 May 2021

தேசபக்தி எல்லை மீறுகிறது

 


கபசுரக்குடிநீர் பாட்டிலில் கோமியத்தை நிரப்புகிறீர்கள்

மயானக் கரையில் அமர்ந்து பஜனை பாடுகிறீர்கள்

இறந்தவர்கள் எழுந்து ஒரு வரிக்கு தாளமிட்டு மீண்டும் கண்மூடிக்கொண்டதாக சிலாகிப்பு வேறு!


மரங்களில் மூக்குரசி ஆக்சிஜனைப் பெற முயற்சித்ததில்

ஏற்கனவே மாண்புமிகு  வைரஸ் குடித்ததுப் போக

மிச்ச சொட்டு ரத்தமும் போகிறது

"போனால் போகட்டும்

ரத்தம் மண்ணுக்கு உயிர் கொரோனாவுக்கு!"

என்று ஆவேசமடைகிறீர்கள்

அமைதி அமைதி

நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்

ஆய்வகங்களில் கமகமக்கிறது சாணத்தின் வாசம்!


அதோ அங்கே

நாசா விஞ்ஞானிகள் 

தெறித்து ஓடுகிறார்கள்

விரட்டிப் பிடித்து பாரத் மாதாவை வாழ்த்தச் சொல்கிறீர்கள்

தேசபக்தியில் கோமாதாவுக்கே புல்லரிக்கிறது!


ஒரு புள்ளிவிவரம் 'மா' என்கிறது

மாட்டுச்சாணி சோப்புக்கும் கோமியச் சானிட்டைசருக்கும்

சந்தையில் தட்டுப்பாடு.

கெளபதியார் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு

கொரோனாவைத் தடுக்க வைக்கோல் மெத்தைகள்!


அதனாலென்ன

தேச பக்தர்களின் விரல்கள் வலுமிக்கவை

கூர் தீட்டினால் போதும்

ராகம் மாறாமல் சொறியத்தக்கவை!

Art : GraphicNerd